தேதியான சம்பளம்…! நேரமான சாப்பாடு…! இன்னும் எத்தனை நாளுக்கு?
தேதியான சம்பளம்...! நேரமான சாப்பாடு...!
தேதியான சம்பளம்…! நேரமான சாப்பாடு…! இன்னும் எத்தனை நாளுக்கு? – என்ற தலைப்பில் எழுதும் இந்த கட்டுரை வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்களை மையமாக கொண்டது.
ஆகவே இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் வெளிநாட்டில் வேலைப்பார்ப்பவாராக இருந்தால் தயவுசெய்து கருத்தை உள்வாங்கி படிக்கவும்.
ஒருவேளை இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இல்லையென்றால், தயவு செய்து வெளிநாட்டில் பல வருடமாக வேலைப்பார்க்கும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிரவும்.
வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்லும் ஒவ்வொருவரும் எதோ ஒரு பணத்தேவைக்காகத்தான் தனது குடும்பம் மற்றும் உறவினர்களை விட்டு இங்கு வந்து பணி செய்கின்றோம். ஆனால் அந்த பணத்தேவை முடிந்தவுடன் நாம் திரும்ப தாய் நாட்டிற்கு செல்கின்றோமா என்றால் இல்லை. ஏனென்றால் மனிதனின் மனம் குரங்கு என்பார்கள். மனிதனின் தேவை ஒரு கட்டத்தில் நின்றுவிடுவதில்லை.
இன்னும் வேண்டும்..! இன்னும் வேண்டும்..! என்று “தனது தேவை எது”? “தனது ஆசை எது”? என்று தெரியாமல் மனம் போன போக்கில் தன்னை மறந்து வெளிநாட்டிலேயே தனது வாழ்வில் பாதி நாளை துளைத்து விடுகின்றோம்.
என்னுடைய தங்கை அல்லது அக்காவிற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும், அல்லது தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக எனக்கு கொஞ்சம் பணத்தை முதலீடாக சேர்க்க வேண்டும், அல்லது என்னுடைய பெற்றோர்களின் மருத்துவ செலவிற்கு உறவினர்களிடம் கடன் வாங்கிவிட்டேன் அதை திருப்பிக்கொடுப்பதற்காக பணம் தேவை படுகிறது ஆகையால் நான் வெளிநாடு வந்தேன் இது போன்று வார்த்தைகளை என்றாவது நீங்கள் கேட்டிருக்கின்ரீர்களா?
நாம் சந்திக்கும் பலரிடமோ அல்லது சிலரிடமோ இம்மாதிரியான வார்த்தைகளை நாம் கேட்டிருப்போம். இவை எல்லாவற்றிற்கும் பணம் என்பது தேவை. ஆகையால் ஒருவன் வெளிநாட்டிற்கு வந்து வேலை செய்து பணம் சம்பாதித்து தேவைகளை பூர்த்திசெய்வது என்பது இயல்பானது.
ஆனால் தேதியான சம்பளம் கிடைக்கிறது, நேரமான சாப்பாடு கிடைக்கிறது என்று சில அல்லது பலபேர் இன்னும் வெளிநாட்டில் வேலைபார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் என்னதான் லட்சியம் என்று கேட்டால் அவர்களிடமிருந்து வரும் பதில் என்னவென்றால் கம்பனியே எப்போ என்னை அனுப்புதோ அப்போ போய்கிடலாம் அதுவரை இந்த வாழ்க்கையை அனுபவித்து கொண்டு போவோம் என்று சொல்வார்கள்.
ஒரு கட்டத்தில் கம்பனியே அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டாலும், அனுபவித்த சுகத்தை மறக்குமா நெஞ்சம்…! மீண்டும் அடுத்த கம்பனிக்கு தாவி மீண்டும் அதே dialogue ல் வாழ்ந்துகொண்டிருப்பான்.
வெளிநாட்டு வாழக்கை என்பது நிரந்தரமல்ல. நம்முடைய முதுமை காலத்தில் நாம் கண்டிப்பாக தாய்நாட்டிக்குத்தான் வந்தாக வேண்டும். எந்த ஒரு company யும் உங்களுடைய முதுமைக்காலம் வரை உங்களை வேலைக்கு வைத்துகொள்ளப்போவதுமில்லை.
உங்களுடைய நிறுவனம் உங்களை 50 அல்லது 55 ஆவது வயதில் வேலையை விட்டு நீக்கினால், மாத வருமானத்தையே நம்பி காலத்தை கழித்த உங்களுக்கு தாய்நாட்டிற்கு வந்து என்ன வேலையை உங்களால் செய்து மீதமுள்ள வாழ்க்கையை கடத்த முடியும்?
ஆகவே நீங்கள் எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் தேவைகளைத்தாண்டி வெறுமனே ஆசைகளை மட்டும் நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டில் வேலை பார்ப்பதை விட்டுவிட்டு உங்களுடைய இளமை காலத்திலேயே ஒரு குறிக்கோளை வைத்து அதற்க்கான பணத்தேவையை சம்பாதித்த பிறகு தாய்நாடு சென்று குடும்பத்துடன் நிம்மதியாக வாழ இப்போதே முடிவு எடுங்கள்.
“இளமையில் சோம்பேறித்தனமாக சம்பாதிக்கும் ஒவ்வொரு செல்வமும், முதுமையில் கஷ்டத்துடன் செலவு செய்வதற்கு சமம்”.